அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும், இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள், இராம நவமி) ஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், சக்தியும் படைத்தவராக திகழ்ந்தார்கள். தாங்கள் பிறந்த திதி-நட்சத்திர நாட்களை, மிக நல்ல சக்தி படைத்த நாட்களாக மாற்றினார்கள், அஷ்டமி, நவமி என்பது புனிதமான திதிகள். அவை இறைவனுக்கு உரியவை.
தோஷ பரிகாரங்களுக்கு ஏற்ற நாட்கள் இவை. அத்தனை சிறப்புமிக்கது.
தனக்காக இல்லை என்றாலும் பிறருக்காக வாழ்ந்தவர். அதனால்தான் இவரை “கண்ணா“ என்கிறோம். அதாவது கண்ணைபோல் காப்பவன், “முகுந்தா”, ”மு” என்றால் முக்தியை அருள்வது என்ற பொருள். “கு” என்றால் இவ்வுலக இன்பங்களை அருள்வது. இவ்வூலகில் வாழ்வதற்கும், முக்தியை பெறுவதற்கும் கிருஷ்ணரே மூலவர் என்ற பொருளின் அடிப்படையில்தான் “முகுந்தா” என்று அழைக்கிறோம்.
தர்மன் செய்த தவறு துரியோதனன் சூதாட்டத்திற்கு பாண்டவர்களை அழைத்தபோது, தர்மர் மறுத்தாலும் பிறகு சபையில் கர்ணன், பாண்டவர்களை கிண்டல் செய்ய, அர்ஜூனன் கோபமாக பேச, தேவை இல்லாமல் வாக்குவாதம் ஏற்பட்டுவிடுமோ என்ற கவலையில் துரியோதனன் சூதுக்கு அழைத்த பிறகு தர்மரும் சூதாட்டம் ஆட தொடங்கினார். “என் சார்பாக என் மாமா சகுனி ஆடுவார்“ என்றான் துரியோதனன். “பாண்டவர்களின் சார்பாக நான் ஆடுவேன்” என்றார் தர்மர் யோசிக்காமல். சகுனியின் தந்திரத்தால் பாண்டவர்கள் சூதில் தோற்றார்கள். தன்னால் எல்லாம் முடியும் என்று எண்ணிய தர்மர், கிருஷ்ணரை அழைக்கவில்லை. ஒருவேளை , “எங்கள் சார்பாக கிருஷ்ணர் விளையாடுவார்” என்று தர்மர் சொல்லி இருந்தால் நிச்சயம் மாயகண்ணன் கௌரவர்களை ஜெயித்து இருப்பார். இதை திரௌபதி உணர்ந்ததால்தான், துச்சாதனன் திரௌபதியின் துகில் உரித்தபோது, அண்ணனை நினைத்து “கோவிந்தா” என்று கண்ணனை அழைத்தாள். அதனால் திரௌபதியின் மானம் சபையில் காக்கப்பட்டது. அதேபோல், போர் களத்தில் கிருஷ்ணனால்தான் ஜெயித்தேன் என்று அர்ஜுனனும் கடைசியில் உணர்ந்தான் என்கிறது வில்லிபாரதம்.
கிருஷ்ணபரமாத்மாவை நம்பினால் நிச்சயம் வெற்றிதான். மனதால் கண்ணனை நினைத்தாலே நன்மைகள் தேடி வரும்
என்பதற்கு பக்தர்களின் வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை செய்து இருக்கிறார் பகவான். கிருஷ்ணபரமாத்மா பாண்டவர்களுக்கு மட்டுமல்ல, எவரும் மனதால் நினைத்தாலேபோதும், மனித உருவத்தில் நமக்கும் உதவிட பகவான் வருவார். பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் கிருஷ்ண பகவான் வடித்த சிலை இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன். இவருக்கு பிள்ளைபாக்கியம் இல்லாததால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்ந்தார். அந்த வளர்ப்பு மகனின் பெயர் யக்ஞ நாராயணன். அவர் தன் தந்தையிடம், அசரீரி தன்னிடம் ஒரு ஆலயம் கட்ட சொன்னதாகவும், அந்த ஆலயத்திற்கு இறைவனின திருமேனியை உருவாக்க, சமுத்திரத்தில் இருந்து மூன்று கட்டைகள் வரும், அந்த கட்டைகளில் இருந்துதான் இறைவனின் உருவத்தை உருவாக்க வேண்டும் என்று அசரீரி சொன்னதாகவும் சொன்னார். தன் வளர்ப்பு மகன் சொன்னதுபோல் அரசரும் கோவில் கட்டும் பணியை சிறப்பாக செய்து வந்தார். அசரீரி சொன்னதுபோல சமுத்திரத்தில் இருந்து இறைவனின் உருவம் செய்ய கட்டைகள் மிதந்து வந்தன. மிதந்து வந்த கட்டைகளை கொண்டு பகவானை சிலையாக வடிக்கும்படி சிற்பிகளிடம் சொன்னார். ஆனால் எவராலும் அதில் பகவானின் திருஉருவத்தை உருவாக்க முடியவில்லை. வருத்தத்தில் இருந்தார் அரசர். அப்போது ஒரு கிழவன், “நான் இந்தகட்டைகளிலிருந்து மூன்று சிலைகள் செய்கிறேன். என்னென்ன சிலைகள் செய்ய வேண்டும்?” என்று கேட்க, ஸ்ரீபலராமர், ஸ்ரீகிருஷ்ணன் மற்றும் சுபத்திரை சிலைகளை வடித்து தரும்படி அரசரும் விருப்பத்தை சொல்ல, அதற்கு அந்த கிழவன், “சரி. அப்படியே செய்கிறேன். ஆனால் அதற்கு 22 நாட்கள் ஆகும். அதுவரை யாரும் ஆலய கதவை திறக்கக்கூடாது” என்றார். அரசரும் சம்மதித்தார். நாட்கள் பறந்தது. 22 நாட்கள் ஆவதற்குள், “ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்க முடியவில்லை” என்பதுபோல், ஒருநாள் அவசர அவசரமாக ஆலய கதவை திறந்தார் அரசர். சிலை வடித்துக்கொண்டிருந்த கிழவர் அப்படியே மறைந்து விட்டார். கிழவன் வடிவில் வந்தது கிருஷ்ணபரமாத்மா என்பதை உணர்ந்தார் அரசர். இறைவனின் சிலை முழுமையாக இல்லாமல் இருந்ததை கண்டு, தன் அவசரத்தால் இப்படி நடந்தவிட்டதே என்று மனம் வருந்தினார். அப்போது அசரீரி குரல் ஒலித்தது. “மனம் வருந்த வேண்டாம் இப்படியே அங்கஹீனனாக என்னை பிரதிஷ்டை செய்து வணங்கு” என்றது அசரீரி. கிருஷ்ணபகவானால் உருவாக்கபட்டதுதான் பூரி ஜகன்நாதர் ஆலயத்தில் இருக்கும் தெய்வசிலை.
பகவான் கிருஷ்ணர், நம்மை எப்போதும் காப்பார். அர்ஜுனன் போருக்கு செல்ல தேரில் ஏறும்போது, தேரில் ஏறுவதற்கு வசதியாக அர்ஜுனனை தன் தோள் மீது ஏற்றி தேர் ஏற வைத்தார் பகவான். இப்படி தன் பக்தர்களின் வெற்றிக்காக ஒரு சேவகனாகவே இருந்து நமக்காக உதவி செய்வார் பகவான் கிருஷணர். இறைவனின் குழந்தை நாம். ஆனால் கிருஷ்ணன் ஒருவன்தான் பூலோக மக்களுக்கு செல்லக் கண்ணனாக யுகயுகமாக இருக்கிறான். பகவான் கிருஷணர் என்றும் நமக்கு குழந்தைதான். அவன், குழந்தை வடிவில் உள்ள தெய்வம்.
கிருஷ்ணனுக்கு கொடுக்க வேண்டிய பாகத்தை ஏமாற்றிய குசேலர் கிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் குசேலர் என்கிற சுதாமாவும் ஒருவர். ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருபத்தினி, கிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார். அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை.
ஆனால் குருவோ, “குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது.” என்றார். “இதனால் குசேலா நீ வறுமையில் வாடுவாய்.” என்றார். சிறு வயதில் நடந்த இந்த சம்பவத்தை காலம், மறக்கச் செய்தது. குசேலருக்கு திருமணம் நடந்தது. குழந்தைகள் பிறந்தனர். சந்தர்பத்திற்காக காத்திருந்த விதி, தன் வேலையை தொடங்கியது. குசேலன் வறுமையில் வாடினார். “எனக்கு இல்லையெனாலும் பராவாயில்லை, ஆனால் நம் குழந்தைகள் உடுக்க மாற்று ஆடை கூட இல்லாமல் இருக்கிறதே. உயிர் வாழ அடுத்த வேளை சாப்பாடும் இல்லையே.” “திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்பார்களே. தெய்வம் போல இருக்கிறாரே உங்கள் நண்பர் கிருஷ்ணர். அவரை சந்தித்து வாருங்கள்.” என்றாள் சுசீலை.
மனைவியின் யோசனையை ஏற்று குசேலன், கிருஷணரை சந்திக்க புறப்பட்டார். அப்போது சுசீலை தன் கையில் சிறு மூட்டையுடன் வந்தாள். “பல வருடங்களுக்கு பிறகு உங்கள் நண்பரை சந்திக்க செல்கிறீர்கள். கிருஷ்ணருக்கு அவல் என்றால் மிக பிடிக்கும் என்பீர்களே. இதோ இதில் கொஞ்சம் அவல் இருக்கிறது. கொண்டு செல்லுங்கள்.” என்றால் மனைவி கொடுத்த அவுள்முட்டையுடன் புறப்பட்டார் குசேலர்.
கிருஷ்ணபரமாத்மாவை பார்க்க. குசேலர் என்பவர் வந்திருப்பதாக கிருஷ்ணரிடம் பணியாளர்கள் சொன்ன உடன் வாசலுக்கு ஓடோடி வந்தார் கிருஷ்ணர். குசேலனை கட்டித்தழுவி உள்ளே அழைத்துச் சென்றார். “அண்ணி எப்படி இருக்கிறார்கள் சுதாமா.? எனக்கு என்ன தந்தனுப்பினார்கள்.? அது என்ன மூட்டை?.” என்றார் கிருஷ்ணர்.
குசேலன் மூட்டையை பிரித்து அவலை கையில் எடுத்தான். அதை ஆசையாக வாங்கி சாப்பிட்டார் கிருஷ்ணர். “அடேங்கப்பா, என் பங்கு அவல் கிடைக்க எத்தனை வருட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது பார்த்தாயா.” என்று சிரித்தார் கிருஷ்ணர். குசேலரும் சிரித்துவிட்டார். கிருஷ்ணரிடம் உதவி கேட்காமல் திரும்புகிறோமே என்ற வருத்தம் குசேலனிடம் இல்லை.
நண்பனின் அன்பே போதும் என்று வீடு திரும்பினார். அங்கே தன் இல்லம் பொன்மயமாக ஜொலிப்பதை கண்டு, எல்லாம் கிருஷ்ணரின் செயலே, என்று மகிழ்ந்து போனார் குசேலர்.
நீ எனக்கு ஒரு இலையைக் கொடு ; அல்லது பூவை கொடு ; இல்லை ஒரு பழத்தைக் கொடு ; அதுவும் இல்லையென்றால் கொஞ்சம் தண்ணீர் கொடு ; எதைக் கொடுத்தாலும் பக்தியோடு கொடு. சுத்தமான மனம் உள்ளவன் பக்தியோடு கொடுப்பதை நான் சாப்பிடுவேன்.“ என்றார் கீதையில் கண்ணன்.
பாகுபாடு பாராமல் குழந்தை உள்ள படைத்த கண்ணனை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் கிருஷ்ணபரமாத்மா, தம் பக்தர்களை தன் கண்ணைபோல் காப்பார். கண்ணனின் அருளாசியால் சகலநலங்களும் பெற்று வளமோடும் நலமோடும் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.
அனைவருக்கும் இனிய கிருஷ்ணஜெயந்தி திருநாள் நல்வாழ்த்துக்கள்.